சானிட்டரி நாப்கின்களுடன் டிஸ்போசபிள் பைகள் இனி கட்டாயம்.. மாசு கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்!
சானிட்டரி நாப்கின்களுடன் டிஸ்போசபிள் பைகள் இனி கட்டாயம்.. மாசுவை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்!

பெண்களின் மாதவிடாய் காலத்தின் அத்தியாவசியமானது சானிடரி நாப்கின். இதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், நாப்கின் பாக்கெட்டுகளுடன் மக்கும் டிஸ்போசபிள் பைகளையும் வழங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக பேசிய அவர், சானிடர் நாப்கின்களுடன் மக்கும் டிஸ்போசபிள் பைகளை வழங்க வேண்டும் என்று நாப்கின் தயாரிப்பு நிறுவனங்களிடம் பலமுறை தெரிவித்தும், நடைமுறையில் அது செயல்படுத்தப்படவில்லை. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த உத்தரவை மத்திய அரசு கட்டாயமாக்க இருக்கிறது என்று தெரிவித்தார்.
ஒரு பெண் மாதம் ஒன்றுக்கு, பன்னிரெண்டு முதல் பதினைந்து நாப்கின்களைப் பயன்படுத்துகிறார். 12 மாதத்துக்கு ஒரு பெண் ஏறத்தாழ 150 மேற்பட்ட நாப்கின்களைப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் 35 கோடி நாப்கின்கள் கழிவாக வெளியேற்றப்படுகின்றன. ஒரு ஆண்டுக்கு 13,000 டன் நாப்கின்கள் பயன்படுத்தப்பட்டு கழிவாக வெளியேற்றப்படுகின்றன.
பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள் எரிக்கப்படும்போது, அதிலிருந்து வெளியாகும் ரசாயனங்களும் காற்றில் கலந்து சுற்றுச்சூழல் கேட்டை ஏற்படுத்துகிறது. சானிட்டரி நாப்கின்கள் எரிக்கப்படுவதால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்தாமல் அதை தூக்கி எறிவதற்கான டிஸ்போசபிள் பைகளால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் காற்று மாசுபாட்டைக் குறித்த கருத்தைத் தெரிவித்திருந்த பிரகாஷ் ஜவடேகர், `காற்று மாசுபாட்டுக்கும் மனிதனின் ஆயுசு குறைவதற்கும் தொடர்பில்லை' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in