எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை கலைப்பு... கர்நாடக ஆளுநர் உத்தரவு
எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை கலைப்பு... கர்நாடக ஆளுநர் உத்தரவு

முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையை கலைத்து ஆளுநர் தவார் சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
தனது ஆட்சிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், அம்மாநில பாஜகவிற்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எடியூரப்பாவிற்கு எதிராக சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் விமர்சித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லி சென்று பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்தார்.
இந்த சூழலில் கடந்த ஜூலை 22-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜகவின் உண்மையான தொண்டனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது கடமை’ என்று பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
It has been an honour to have served the state for the past two years. I have decided to resign as the Chief Minister of Karnataka. I am humbled and sincerely thank the people of the state for giving me the opportunity to serve them. (1/2)
— B.S. Yediyurappa (@BSYBJP) July 26, 2021
இதனைத் தொடர்ந்து எடியூரப்பா இன்று கர்நாடக மாநில ஆளூநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா சரியாக அதே நாளில் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையை கலைத்து அம்மாநில ஆளூநர் தவார் சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் இந்த அமைச்சரவை கலைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

