தவித்த கல்லூரி மாணவன் குடும்பம்... முதல்வர் ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி !!
தவித்த கல்லூரி மாணவன் குடும்பம்... முதல்வர் ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி !!

குமாரபாளையத்தில் தனியார் கல்லூரியில் குடும்ப பொருளாதாரம் காரணமாக படிப்பை தொடர முடியாத கல்லூரி மாணவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்லூரி கட்டணம் செலுத்தியுள்ளார். மேலும் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த மளிகை கடை அமைத்து தரப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்போனில் தெரிவித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் சண்முகம் - பாண்டிச்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகன் நவீன் குமார் சித்தோட்டில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5 மாதமாக தாய் தந்தைக்கு உடல் நலக்குறைவு காரணமாக கல்லூரி மாணவன் நவீன் குமார் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி தலைமை செயலகத்திற்கு முதல்வர் தனி பிரிவுக்கு சென்று குடும்ப சூழல் காரணமாக தனியார் கல்லூரியில் படிப்பு தொடர முடியவில்லை எனவும், அரசு கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் என மனு கொடுத்து வந்த மறுதினமே, கல்லூரி மாணவர் நவீன் குமாருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஓய்வில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், மாணவனின் மனுவை படித்து பார்த்து விட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் மதிவேந்தன் மூலம் இந்தாண்டு கல்லூரி கட்டணத்தை செலுத்தியுள்ளார்.

அதோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். அப்போது பொருளாதார சிரமத்தில் உள்ள தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்த நிலையில், ஜெராக்ஸ் எடுப்பதுடன் கூடிய மளிகை கடை வைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இதனால் அந்த குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ள நவீன் குமார் தந்தைக்கு அரசு உதவி பணம் வழங்குவதற்காக குடும்பத்தினர் தகவல்களை வருவாய் துறையினர் சேகரித்தனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள படிப்பு வாய்ப்பை நல்வாய்ப்பாக பயன்படுத்துேவன் என மாணவர் நவீன் குமார் நம்பிக்கை தெரிவித்தார். இந்த சம்பவத்தால் சண்முகம் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிராம மக்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.
newstm.in

