திமுக – அதிமுக நிர்வாகிகள் இடையே கைகலப்பு!
திமுக – அதிமுக நிர்வாகிகள் இடையே கைகலப்பு!

சேலத்தில் வாக்கு சேகரிப்பின் போது திமுகவினரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் அதிமுக வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.
தாதகாப்பட்டி பகுதியில் 58ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாண்டியன் என்பவர் இந்திரா நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில், திமுகவினர் மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் சாக்கடை சரிசெய்யும் பணியை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதிக்கு சென்ற அதிமுக வேட்பாளர் பாண்டியன், தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்தார்.இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், வாக்குவாதம் முற்றி அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், திமுக வேட்பாளரின் சகோதரர் சின்னையன் என்பவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அன்னதானபட்டி காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், அதிமுக வேட்பாளர் பாண்டியன் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
ஆனால் அவரை போலீஸார் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
newstm.in

