கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவருக்கு ஆபரேஷன் செய்த திமுக எம்பி..!
கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவருக்கு ஆபரேஷன் செய்த திமுக எம்பி..!

சென்னை திருவெற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கறுப்ப பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 8 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்த மருத்துவமனைக்குச் சென்ற திமுக எம்பி கலாநிதி வீராசாமி, நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவருக்கு, டாக்டரான கலாநிதி வீராசாமி மற்றும் டாக்டர்கள் மதன்குமார், கார்த்திகேயன் அடங்கிய குழுவினர், முக எலும்பு மற்றும் கண்ணில் அறுவைச் சிகிச்சை செய்தனர். அப்போது, அவருக்கு நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது தெரியவே, அவருடைய வலது கண் முற்றிலுமாக அகற்றப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி கலாநிதி வீராசாமி, தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு குறைவானோரே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழகத்திற்கு கறுப்பு பூஞ்சை சிகிச்சைக்குத் தேவையான Amphotericin-B மருந்தை நாளொன்றுக்கு 4 ஆயிரம் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

