“தமிழர்கள் எங்கிருந்தாலும் திமுக காப்பாற்றும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!
“தமிழர்கள் எங்கிருந்தாலும் திமுக காப்பாற்றும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!

தமிழ் என்று சொன்னாலே உத்வேகம் பிறக்கிறது என்றும் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை திமுக காப்பாற்றும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்தியும், தொடங்கி வைத்தும் வருகிறார்.
அதே நேரத்தில் தேர்தல் வாக்குறுதியான நகைக்கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

மீதமுள்ள தேர்தல் வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை திமுக காப்பாற்றும் என கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தங்கை மகனின் திருமணம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் என்று சொன்னாலே உத்வேகம் பிறக்கிறது எனக் கூறினார். மேலும், உள்ளூர் தமிழனாக இருந்தாலும் உக்ரைனில் உள்ள தமிழனாக இருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம் திமுக எனவும் பேசினார்.
newstm.in

