டிஎன்பிஎஸ்சி: ஆள் மாறாட்டம் தடுக்க புதிய நடவடிக்கை.. இனி யாரும் தப்பமுடியாது !
டிஎன்பிஎஸ்சி: ஆள் மாறாட்டம் தடுக்க புதிய நடவடிக்கை.. இனி யாரும் தப்பமுடியாது !

தமிழக அரசு துறைகளில் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த தேர்வை வெளிப்படை தன்மையுடனும் எந்தவித முறைகேடுகளும் இன்றி நடத்த புதிய தொழில்நுட்ப வசதிகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், வரும் காலத்தில் தேர்வு எழுத வருவோர் ஹால் டிக்கெட்டை அச்செடுத்து வருவதற்கு பதில் தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் விரல் ரேகை பதிவு முறையை அறிமுகம் செய்ய டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆலோசனைகள் முடிந்துள்ளன.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, டி.என்.பி.எஸ்.சி.,யால் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோரின் நேர்மை தன்மையை தெரிந்து கொள்ள தேர்வு முடிவுகள் வந்ததும் தேர்வர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை அந்தந்த துறைகளின் வழியே முழுமையாக ஆய்வு செய்கிறோம். போலீஸ் வழியே தேர்வர்களுக்கு குற்றவியல் பின்னணி மற்றும் வழக்கு விபரங்கள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்கிறோம். அதன்பிறகே, பணி நியமனம் வழங்கப்படுகிறது.

எனவே, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு செய்த பணியாளர்களிடம் போலி சான்றிதழ் பிரச்சனை எதுவும் எழுந்ததில்லை. எனவே, தேர்வு நடைமுறைகளை எளிமையாக்கவும் பாதுகாப்பான வெளிப்படை தன்மையை கொண்டு வரவும் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்படுகின்றன. இதன்படியே, ஜூனில் நடக்க உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கான தேர்வில் கணினி வழி தேர்வு பரீட்சார்த்த முறையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஆள் மாறாட்ட பிரச்னைகளை அறவே தடுக்கும் வகையிலும், தேர்வர்களின் அடையாளத்தை கணினிவழிப்படுத்தும் வகையிலும், தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்ய திட்டமிட்டுஉள்ளோம். தேர்வர்கள் ஹால் டிக்கெட் எடுத்து வருவதற்கு பதில் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்தால் அதில் உள்ள தகவலின்படி தேர்வறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர்.

இதற்காக ஆதார் போன்ற ஒருங்கிணைந்த அடையாள அமைப்பின் விபரங்களை பயன்படுத்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும், என அவர் கூறினார்.
newstm.in

