மின்வெட்டு குறித்து பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம்... அமைச்சர் வேண்டுகோள்
மின்வெட்டு குறித்து பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம்... அமைச்சர் வேண்டுகோள்

சமூக வலைத்தளங்களில் மின் வெட்டு என பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 6 மாதங்களுக்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. 16ஆம் தேதி காணொளிக் காட்சி வாயிலாக இந்த விவசாயிகளுடன் முதல்வர் பேச இருக்கிறார்.

11 மாத காலத்தில் 3527 மெகா வாட் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நிலக்கரி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4.80 லட்சம் டன் வாங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. கோடை கால மின் சேவையை முதலமைச்சர் தொடர்ந்து கண்கானித்து வருகிறார். 18 ஆயிரம் மெகா வாட் மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தின் சொந்த மின் உற்பத்தியை மேலும் பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மின் வெட்டு ஏற்பட்டால் 24 மணி நேரமும் மின்னகத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும், சமூக வலைத்தளங்களில் மின் வெட்டு என்ற பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம், என்று அவர் கேட்டுக்கொண்டார்.
newstm.in

