விதிகளை மீறிய துரைமுருகன்.. வழக்கு பாயுமா.. ஊருக்கு மட்டும்தான் உபதேசமா..?
விதிகளை மீறிய துரைமுருகன்.. வழக்கு பாயுமா.. ஊருக்கு மட்டும்தான் உபதேசமா..?

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு வார நாட்களில் இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (9ம் தேதி) முழு ஊரடங்கு நாளில் வேலூர் மாவட்ட திமுகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்தவர்களும் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டின் முன்பாக கூட்டமாகக் கூடி நின்றனர். ஆளுங்கட்சியினர் என்பதால் ஊரடங்கு கட்டுப்பாட்டிற்கு முழுக்கு போட்டு, கொரோனா தொற்று பரவ வழிவகை செய்துள்ளனர்.
தொண்டர்களுக்கு புத்தி சொல்ல வேண்டிய மூத்த அமைச்சர் துரைமுருகனும் ஊரடங்கு காலம் என்பதை மறந்து வீட்டின் முன்பாக கூடியிருந்த பல்வேறு கட்சிப் பிரமுகர்களை வழக்கம் போல் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனைக் கண்ட சமூக ஆர்வலர்களும் நெட்டிசன்களும், அரசுக்கு பல்வேறு கேள்விகளை சமூக வலைதளத்தில் எழுப்பி வருகின்றனர். இந்த நிகழ்விற்கு பொதுமக்களும் எங்களுக்கு ஒரு சட்டம் ஆளுங்கட்சியினருக்கு ஒரு சட்டமா என கொதித்தெழுந்துள்ளனர்.
ஆளுங்கட்சியின் மூத்த அமைச்சரே கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதால் துரைமுருகன் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம், முழு ஊரடங்கில் வாகனத்தில் செல்பவர்களுக்கு அபராதம் என பொதுமக்களிடம் ஸ்டிக்ட்ராக நடந்து கொள்ளும் போலீசார், மூத்த அமைச்சர் என்பதற்காக கரிசனம் காட்டுமா அல்லது வழக்கு பதிவு செய்யுமா என்ற கேள்வி வேலூர் மாவட்டம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
மேலும், யாராக இருந்தாலும் அரசின் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

