ஆர்டர் செய்தால் போதும்.. வீட்டிற்கே வந்து மருந்து சப்ளை: ஆயத்தமாகி வருகிறது அரசு..!
ஆர்டர் செய்தால் போதும்.. வீட்டிற்கே வந்து மருந்து சப்ளை: ஆயத்தமாகி வருகிறது அரசு..!

தமிழக கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், 373 கூட்டுறவு மருந்தகங்களை நடத்தி வருகின்றன. அவை, சிந்தாமணி, காமதேனு, காஞ்சிபுரம் கூட்டுறவு, அம்மா உள்ளிட்ட பல பெயர்களில் இயங்குகின்றன.
தற்போது, ஒவ்வொரு சங்கமும் மருந்து, மாத்திரைகளை, அவற்றின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து தாங்களே நேரடியாக கொள்முதல் செய்கின்றன. அந்நிறுவனங்கள், எம்ஆர்பி எனப்படும் அதிகபட்ச சில்லறை விலையில் 26 சதவீத தள்ளுபடியில் மருந்துகளை வழங்குகின்றன.
அதில், கூட்டுறவு மருந்தகங்கள் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத தள்ளுபடியில் மருந்துகளை விற்கின்றன.இதை உயர்த்தி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, ஒவ்வொரு சங்கமும் தனித்தனியே மருந்துகளை வாங்குவதற்கு பதில், ஒரே கூட்டுறவு நிறுவனத்தின் வாயிலாக மொத்தமாக கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, சங்கங்களுக்கு, சப்ளை நிறுவனங்களிடம் இருந்து 36 சதவீத தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.
அதனால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் என, மொத்தம் 30 சதவீத தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்தால் வீட்டிற்கே டெலிவரி செய்யவும் ஆயத்தமாகி வருகிறது. எப்படி டெலிவரி செய்வது; எவ்வளவு செலவாகும் என்பது உள்ளிட்டவை குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
முதல் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு மருந்தகங்களுக்கு மட்டும், ஒரே கூட்டுறவு நிறுவனம் வாயிலாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. அதன் செயல்பாட்டை பொறுத்து மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

