சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. கட்டடம் தரைமட்டம்.. ஒருவர் பலி..!
சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. கட்டடம் தரைமட்டம்.. ஒருவர் பலி..!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டி பகுதியில் பெரியகருப்பன் (57) என்பவருக்கு சொந்தமான எஸ்.பி.டி. பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
டி.ஆர்.ஓ உரிமம் பெற்றுள்ள இந்த தொழிற்சாலையின் 5 அறைகளில் 20 தொழிலாளர்கள் சிறிய ரக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
அப்போது, விக்னேஸ்வரன் என்பவர் ஒரு அறையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை தரைமட்டமாகி, இடிபாடுகளில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் தீயை அணைத்து, மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சம்பவத்தில் உயிரிழந்த விக்னேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் யாராவது கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என்று தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

