அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு!!
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, வயலுக்குச் சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதுகுளத்தூரை அடுத்துள்ள மேலச்சிறுபோது கிராமத்தில் முத்தையா என்ற விவசாயி, தனது வயலில் வேலை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அவர் செல்லும் வழியில் உயர் மின் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது.
ஆனால் அதனை கவனிக்காமல் முத்தையா அதன்மீது கால் வைத்ததில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பதற்றமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் விவசாயி முத்தையாவின் உறவினர்கள் திரண்டுவந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற காவல் மற்றும் வருவாய்த்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வயல்வெளியில் தாழ்வாகச் செல்லும் உயர் மின் அழுத்த கம்பியை சீரமைக்கும்படி பலமுறை மின் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மேலச்சிறுபோது கிராமத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதன் காரணமாகவே தற்போது மின்கம்பி அறுந்துவிழுந்து ஒரு விவசாயியின் உயிரைப் பறித்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
newstm.in

