வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு பெரும்பாலானவர்களின் சாய்சாக இருப்பது வாட்ஸ் அப் மட்டுமே. பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப், தனது தனியுரிமை கொள்கைகளில் சமீபத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்தது.
அச்செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களின் தனியுரிமை தொடா்பான தகவல்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட உறுப்பு நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பனை செய்வது புதிய கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய கொள்கைக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. இந்தச் சூழலில், புதிய தனியுரிமை கொள்கையை வாட்ஸ்ஆப் நிறுவனம் கைவிட வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
அதில், வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன் தனியுரிமை கொள்கையில் கொண்டுவந்திருக்கும் புதிய மாற்றங்கள், இந்திய குடிமக்களின் நலன் மற்றும் உரிமைகளை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், பயனாளா்களின் விருப்பம், தகவல் பாதுகாப்பு, தகவல் பறிமாற்ற தனியுரிமையையும் கேள்விக்குறியாக்குவதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய சட்டங்கள் மற்றும் விதிகளில் உள்ள பல்வேறு பிரிவுகளை இந்த புதிய கொள்கை மீறியுள்ளது எனவும், இந்தியா்களில் பெரும்பாலோனோர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் பிரச்னைக்குரியது . அத்துடன் பயன்பாட்டாளா்கள் மீது நியாயமற்ற நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
எனவே, தனியுரிமை கொள்கையில் கொண்டுவந்திருக்கும் புதிய மாற்றங்களை வாட்ஸ்ஆப் நிறுவனம் உடனடியாக கைவிட வேண்டும். இதுகுறித்த விளக்கத்தை 7 நாள்களுக்குள் உரிய வகையில் சமர்ப்பிக்க வேண்டும். திருப்திகரமான பதில் கிடைக்கப்பெறவில்லை எனில், அடுத்ததாக சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

