“சாதியை இழிவுப்படுத்தினார்… கன்னத்தில் அறைந்தார்” : விஜய் சேதுபதி மீது சக நடிகர் புகார்!
“சாதியை இழிவுப்படுத்தினார்… கன்னத்தில் அறைந்தார்” : விஜய் சேதுபதி மீது சக நடிகர் புகார்!

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது, விஜய சேதுபதி, தனது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் நடிகர் காந்தி புகார் தெரிவித்துள்ளார்.
நடிகரான சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்ததாகவும், அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

திரைத்துறையில் இருக்கின்ற சக நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை 9ஆவது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

