வயலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்!!
வயலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்!!

பட்டுக்கோட்டை அருகே வீட்டைவிட்டு வெளியேறிய பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியின் மேல்கரை பகுதியில் பெண் ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வயலில், நாய் தரையைத் தோண்டுவதைக் கண்டு சந்தேகமடைந்து சென்று பார்த்துள்ளார்.
அங்கு ஏதோ உடல் புதைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக விஏஓ சரவணனிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஏஓ சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அங்கு உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை காவல்துறையினர், தாசில்தார் கணேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்த அன்னபூரணி (52) என்பது தெரியவந்தது.
அன்னபூரணி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் நகைக்காக கொலை செய்தனரா அல்லது சொத்து பிரச்னை தொடர்பாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
newstm.in

