தோஷம் நீக்குவதாக ரூ.12 லட்சம் சுருட்டிய பெண் சாமியார் கைது!!
தோஷம் நீக்குவதாக ரூ.12 லட்சம் சுருட்டிய பெண் சாமியார் கைது!!

குடும்பத்திற்கே தோஷம் உள்ளது என்று கூறி ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 37 சவரன் நகைகளை சுருட்டிய பெண் சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் கோரிமேடு பகுதியில் முருகன் என்பவரின் வீட்டின் மாடியில் வாடகைக்கு கடந்த 2020ஆம் ஆண்டு சத்தியவதி என்பவர் இரண்டு மகள்களுடன் குடிவந்தார்.
முருகனின் அக்கா உமாமகேஸ்வரி தனது 16 வயதில் இறந்து விட்டார். தனது அக்காவின் புகைப்படத்தை முருகன் வீட்டில் வைத்திருந்தார். இதைப்பார்த்த சத்தியவதி உங்கள் வீட்டில் தோஷம் இருக்கிறது என்றார்.
தோஷத்தை போக்கினால் தான் நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க முடியும் என்று முருகனின் மனைவி லட்சுமியிடம் கூறியிருக்கிறார். வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமே இந்த தோஷத்தை கழிக்க வேண்டும். ஆண்களுக்கு தெரியக்கூடாது என்று முருகனின் தாயார் மற்றும் மனைவியிடம் கூறியிருக்கிறார்.

தோஷத்தை தானே நீக்குவதாகவும் தனக்கு அனைத்து பூஜைகளும் தெரியும் எனக் கூறி படிப்படியாக பணத்தை அவர்களிடம் இருந்து வாங்கி உள்ளார். பணம் கொடுத்த விவகாரம் ஆண்களுக்கு தெரியக்கூடாது. தெரிந்தால் அவர்கள் இறந்து விடுவார்கள் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனால் கையில் இருந்த 7 லட்சம் ரூபாய், உறவினர்களிடம் வாங்கிய 5 லட்சம் ரூபாய் மற்றும் 37 சவரன் நகைகளை படிப்படியாக இருவரும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் முருகனின் தந்தை துரைராஜன் ஒரு மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார்.

கருமாதிக்கு வரும் பணத்தை கூட வீட்டு செலவுக்கு பயன்படுத்த கூடாது. தோஷமாகி விடும் எனக்கூறிய சத்யவதி, அந்தப்பணத்தையும் வாங்கியுள்ளார். இறுதி சடங்கிற்கு வந்த உறவினர்கள் சிலர் முருகனிடம் மனைவி, தாயார் ஆகியோர் பலரிடம் கடன் வாங்கி இருப்பதை தெரிவித்தனர்.
அப்போதுதான் சத்தியவதி தோஷத்தை நீக்குவதாக கூறி பணம் பறித்த தகவல் முருகனுக்கு தெரியவந்தது. உடனே புதுச்சேரி தன்வந்தி நகர் காவல் நிலையத்தில் இந்த விவகாரம் பற்றி புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, சத்தியவதியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
newstm.in

