ஊராட்சியில் நிதி முறைகேடு.. அதிமுக தலைவர் அதிகாரம் பறிப்பு..!
ஊராட்சியில் நிதி முறைகேடு.. அதிமுக தலைவர் அதிகாரம் பறிப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கரைப்பூண்டி கிராம ஊராட்சி மன்றத் தலைவராக அதிமுகவை சேர்ந்த இந்திரா பாலமுருகன் பதவி வகித்து வந்தார்.
இவர், ஊராட்சி நிதியில் முறைகேடு செய்ததாக 2-வது வார்டு உறுப்பினர் வேலு, 8-வது வார்டு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷுக்கு எழுத்துப் பூர்வமாக முறைகேடுகளை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊராட்சி செயலாளர் அறவாழி, செயற்பொறியாளர் கோவிந்தன் மற்றும் சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகோபால், கோவிந்தராஜுலு ஆகியோர் கரைபூண்டி பஞ்சாயத்துக்கு சென்று அங்கு உள்ள பதிவேடுகள் மற்றும் ஊராட்சி நிதி குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது, 1-4-2021 முதல் 31-3-2022 வரை உள்ள பதிவேடுகள், கணக்குகள் குறித்து தலைவர் இந்திரா பாலமுருகனிடம் கேட்டபோது அவர் எந்தவித பதிலும் கூறாததால் இதில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு கூடுதல் கலெக்டர் பிரதாப் அறிக்கை அனுப்பினார்.
இதனை தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா பாலமுருகனின் அதிகாரம் பறிக்கப்பட்டு, சேத்துப்பட்டு பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபாலை தனி அலுவலராக நியமித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

