போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!!
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!!

இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
இலங்கையில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனால் நடுத்தர மக்களால் இலங்கையில் வாழவே முடியாது என்ற சூழல் நிலவுகிறது.இந்த பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசின் தவறான கொள்கைகள் தான் காரணம் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஆத்திரமடைந்திருக்கும் மக்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவையும், முக்கிய நகரான கண்டியையும் இணைக்கும் சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை கலைப்பதற்காக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இலங்கையில் மக்கள் போராட்டம் தொடங்கியதில் இருந்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

