முதலில் தூக்குங்க... இங்கே எதுக்கு பிரதமர் மோடியின் போட்டோ... அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்
முதலில் தூக்குங்க... இங்கே எதுக்கு பிரதமர் மோடியின் போட்டோ... அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்

பொதுவாக அரசியல் கட்சியினர் விளம்பர பிரியர்கள்தான். தங்கள் கட்சியின் சின்னம், கொடி முதல் அனைத்தையும் விளம்பரப்படுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். இதற்கு பெரும்பாலான கட்சிகள் உதாரணமாக இருந்தாலும், விளம்பரங்களில் பாஜக கூடுதல் கவனம் செலுத்தி வரும். குறிப்பாக தேர்தல் நேரத்தில் இதற்காகவே பிரத்தியேக முயற்சிகளை மேற்கொள்ளும்.
கணக்கில்லாமல் செலவுகளையும் செய்யும் பாஜக, டிஜிட்டல் விளம்பரங்களில் அதிக ஆர்வம் காட்டும். ஆனால் சில சமயங்களில் சம்பந்தமே இல்லாமல் தலைவர்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொள்ளும் விமர்சனத்துக்கும் ஆளாக நேரிடும்.
அப்படித்தான் சமீபத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி, தன்னுடைய ஆட்சியில் மாநிலம் வளர்ந்துள்ளது என்பதை விளம்பரம் மூலம் கொல்கத்தாவில் தெரியப்படுத்தினார். தன் மாநில அரசின் சாதனை விளம்பரத்தில் கொல்காத்தாவில் உள்ள மேம்பாலம் படம் இடம்பெற்றும் இருந்தது. மேற்கு வங்கத்துக்கும் உபிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு, இது மிகப்பெரிய சர்ச்சையாகவும் வெடித்தது.

இப்போது இன்னொரு விவகாரம் வெடித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் அதாவது இமெயில் முகவரியில் பிரதமர் மோடியின் போட்டோ இருந்துள்ளது. 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமான வாசகங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. ஆகஸ்ட் மாதம் இந்த போட்டோ பதிவிட்டுள்ளது போல தெரிகிறது.
இத்தனை நாளும் இதனை யாருமே கவனிக்கவில்லை. நேற்று முன்தினம்தான் உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் இதை கவனித்திருக்கிறார். உடனடியாக இதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கும் எடுத்து சென்றுள்ளார்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரியிலிருந்து பிரதமர் மோடியின் போட்டோ மற்றும் வாசகங்களை நீக்க உடனடியாக தேசிய தகவல் மையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இ-மெயிலில் பிரதமர் மோடியின் போட்டோ இருந்த இடத்தில், உச்சநீதிமன்றத்தின் போட்டோவை வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

