12- 15 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த பைசர் நிறுவனம் கோரிக்கை.. இங்கிலாந்து யோசனை !!
12- 15 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த பைசர் நிறுவனம் கோரிக்கை.. இங்கிலாந்து யோசனை !!

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் கொரோனா எதிராக தான் தற்போது போராடி வருகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனாவின் முதல் அலையில் சிக்கியது இங்கிலாந்து. அங்கு பாதிப்புகளும் உயிரிழப்புகளும் பெருமளவில் ஏற்பட்டன. எனினும் அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
தற்போது நாள்தோறும் பாதிப்பு ஏற்பட்டு வந்தாலும் அங்கு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அதற்கு தடுப்பூசி செலுத்திகொண்டது மற்றொரு காரணமாக அமையலாம். இங்கிலாந்து நாட்டில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அங்கு தற்போது பைசர் தடுப்பூசி, ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி மற்றும் மாடர்னா ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன.

தற்போது இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கான அனுமதி வழங்குவது பற்றி முடிவு எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பைசர் தடுப்பூசி நிறுவனம் இங்கிலாந்து அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் 12 முதல் 15 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மூலம் அவர்களின் உடலில் ஏற்படும் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசியை 12 முதல் 15 வயது வரை உள்ள 2,260 சிறுவர்கள் மீது சோதனை செய்யப்பட்டதாகவும், அதில் 100 சதவீதம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் உண்டாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 2 முதல் 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆய்வு முடிவுகளை செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அரசிடம் ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அனுமதி அளித்தால் இங்கிலாந்தில் 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கான பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
newstm.in

