முன்னாள் முதல்வர் மனைவி மரணம்.. முதல்வர், துணை முதல்வர் இரங்கல்..!
முன்னாள் முதல்வர் மனைவி மரணம்.. முதல்வர், துணை முதல்வர் இரங்கல்..!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
சாதனா குப்தா, நுரையீரல் தொற்று காரணமாக குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அவர் காலமானார். சாதனா குப்தாவின் உடல் லக்னோவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் மற்றும் உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் தனது ட்விட்டர் பதிவில், “உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தாவின் மறைவு குறித்த மிகவும் வருத்தமான செய்தி கிடைத்தது.
இந்த இழப்பை தாங்கிக் கொள்ள முலாயம் சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கடவுள் வலிமை அளிக்கட்டும். இறந்த ஆத்மா சாந்தி அடையட்டும்” எனக் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தனது ட்விட்டர் பதிவில், “முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா மறைவு என்ற சோகமான செய்தி கிடைத்தது.
இறைவன் காலடியில் அவரது புனித ஆத்மா சாந்தியடையட்டும். முலாயம் சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பை தாங்கிக் கொள்ளும் தைரியம் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

