இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக ரீசார்ஜ்.. வைரலாகும் தகவலும் உண்மையும் !!
இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக ரீசார்ஜ்.. வைரலாகும் தகவலும் உண்மையும் !!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று கோடியை கடந்துவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,833 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் நாடு முழுக்க 4 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அதோடு கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் பாதிப்பு, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு மட்டுமின்றி பல்வேறு தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய அரசாங்கம் இந்திய பயனர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் வழங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் வலம்வரும் தகவலில், தடுப்பூசி செலுத்துவதில் வரலாறு படைக்கப்பட்டு இருப்பதை ஒட்டி இந்திய அரசு அனைவருக்கும் மூன்று மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் வழங்குகிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்த இணைய தேடல்களில், வைரல் தகவலில் துளியும் உண்மையில்லை என மத்திய அரசு நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. மேலும் அரசு சார்பில் இதுபோன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
newstm.in

