இவர்களுக்கு இலவச பயணம்.. அனுமதிக்காத டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை..!
இவர்களுக்கு இலவச பயணம்.. அனுமதிக்காத டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை..!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்காத ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது விசாரணை மேற்கொண்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அனைத்து மண்டல ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு போக்குவரத்து துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘நமது கழக பேருந்துகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவர்களின் மனைவி/ கணவர்/ உதவியாளர் ஒருவருடன் இலவச பயணம் மேற்கொள்ள பேருந்துகளில் அனுமதிப்பதில்லை எனவும் மற்றும் அவர்களுக்கு உரிய இருக்கை வழங்கப்படுவதில்லை எனவும் புகார்கள் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அனைத்து மண்டல ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தங்கள் பணியின்போது, ஏசி பேருந்து உட்பட நமது கழக பேருந்துகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவர்களின் மனைவி/ கணவர்/ உதவியாளர் ஒருவருடன் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு உரிய இருக்கை வழங்க வேண்டும் எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், மேற்கண்டவாறு புகார் பெறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


