150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு.. விரைவில் அறிவிப்பு.. தமிழகத்தில் எங்கெல்லாம் !!
150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு.. விரைவில் அறிவிப்பு.. தமிழகத்தில் எங்கெல்லாம் !!

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2ஆவது அலையில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, அரியானா, குஜராத், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தான் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் நிலைமை மோசமாக உள்ளதும், அங்கு கடந்த 2 வாரங்களை ஒப்பிடும்போது 15 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிப்பு உயர்ந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று மத்திய சுகாதாரத்துறை, உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அப்போது தொற்று பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை கொண்டு வரலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அதாவது 15 சதவீதத்துக்கும் மேல் பரவல் உள்ள 150 மாவட்டங்களிலும் சில தளர்வுகளை மட்டும் அறிவித்து விட்டு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
எனவே அந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசிடம் சுகாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இந்தநிலையில் அடுத்தக்கட்டமாக, மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோடு கலந்து ஆலோசித்து விட்டு முடிவு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்று பரவல் மிக அதிகளவில் உள்ள மாவட்டங்களில் அதன் பரவல் சங்கிலி தொடரை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த 150 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் சென்னையில் தான் கடந்த 5 நாட்களாக ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேலாகவும், கோவை, காஞ்சிபுரத்தில் ஆயிரத்தை நெருங்கியும் ஒருநாள் பாதிப்பு பதிவாகி வருகிறது.
newstm.in

