கோகுல்ராஜ் கொலை வழக்கு.. யுவராஜூக்கு ஆயுள் முழுக்க சிறை தண்டனை
கோகுல்ராஜ் கொலை வழக்கு.. யுவராஜூக்கு ஆயுள் முழுக்க சிறை தண்டனை

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவரும், நாமக்கல்லை சேர்ந்த இளம்பெண்ணும் நட்பாக பழகினர். இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கண்டெடுக்கப்பட்டார். அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.
அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலையில் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை போலீசார் தேடி வந்த நிலையில் 11.10.2015 அன்று நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் மேலும் 16 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். சாதி ஆணவப் படுகொலையான இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த நிலையில் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்களான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண், குமார் மற்றும் சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கான தண்டனை 8-ந்தேதி (இன்று) அறிவிக்கப்படும் என நீதிபதி சம்பத் குமார் தெரிவித்தார். வழக்கில் தொடர்புடைய சங்கர், அருள்செந்தில், செல்வகுமார் தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டப்படி இன்று காலை யுவராஜ் உள்பட 10 பேரும் நீதிபதி சம்பத்குமார் முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் மதியம் நீதிபதி சம்பத்குமார் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை அறிவித்தார்.
அதன்படி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனையும், மற்றொரு முக்கிய குற்றவாளியான அருண் என்பவருக்கும் 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதே போல் குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும் மற்றொரு குற்றவாளியான சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பிரபு மற்றும் கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, 5 வருட கடுங்காவல் தண்டனையும் மற்றும் தலா ரூ.5ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
newstm.in

