ரஜினி ரசிகர்களுக்கு தித்திப்பான செய்தி…
ரஜினி ரசிகர்களுக்கு தித்திப்பான செய்தி…

ரஜினிகாந்த் நடிப்பில்,‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என நான்கு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவுற்றது.
இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ரஜினி. அங்கு, மருத்துவ பரிசோதனைகளை முடித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார் ரஜினி.
இந்நிலையில் தற்போது ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள பெலிசியா டவர்ஸில் செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதில், ரஜினி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்புடன் ரஜினி தொடர்பாக மொத்த காட்சிகளும் முடிக்கப்பட்டு விடும். இந்த இரண்டு நாள் படப்பிடிப்புக்கு பிறகு வரும் 25ம் தேதி முதல் டப்பிங் பணிகளில் ரஜினி கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து. கொல்கத்தா செல்லும் படக்குழுவினர், அங்கு சில காட்சிகளையும், தொடர்ந்து லக்னோவில் சில காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், திட்டமிட்டபடி வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி, தீபாவளியையொட்டி ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.

