ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு!!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு!!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஜூன் 7ஆம் தேதி முதல் 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருந்தது. No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியிருந்தது.

தொடர்ந்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அதேபோல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி தெரிவித்துள்ளது. நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு கனிவுடன் பரிசீலித்து வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதன் மீது நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நியாய விலைக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

