500 டன் பாலம் திருடப்பட்ட வழக்கில் சிக்கிய அரசு அதிகாரி!!
500 டன் பாலம் திருடப்பட்ட வழக்கில் சிக்கிய அரசு அதிகாரி!!

பீகாரில் 500 டன் எடை கொண்ட பாலம் திருடப்பட்ட சம்பவத்தில் நீர்வளத் துறையின் துணைப் பிரிவு அதிகாரி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் நாசிரிங்க் பகுதியில் ஆற்றை கடந்து செல்ல கடந்த 1972ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இரும்பு பாலம் ஒன்று பயன்பாடற்ற வகையில் இருந்தது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்த வழியாக சென்ற மக்கள் இரும்பு பாலம் முழுவதுமாக காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணையில் இந்த திருட்டு பட்டப்பகலில் தான் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. நீர்ப்பாசனத் துறையுடன் இணைந்து பணியாற்றும் அரசு அதிகாரிகள் போல் காட்டிக் கொண்ட கொள்ளையர்கள் சிலர் பாலத்தை திருடினர்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து உழைத்து பாலத்தை அகற்றியுள்ளனர். பாலத்தை அகற்ற கிராம மக்கள் நீர்ப்பாசனத்துறையிடம் ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளதால் அதிகாரிகள் உண்மையிலேயே வந்து அகற்றுவதாக நினைத்து விட்டதாக பொதுமக்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தற்போது இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக நீர்வளத் துறையின் துணைப் பிரிவு அதிகாரி (எஸ்டிஓ) உட்பட எட்டு பேரை பீகார் காவல்துறை கைது செய்துள்ளதாக காவல்துறை கண்காளிப்பாளர் ஆஷிஷ் பார்தி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு ஜேசிபி, திருடப்பட்ட 247 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் மற்றும் பிற பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.
newstm.in

