ஆளுநர் பதவி விலக வேண்டும் : டி.ஆர்.பாலு அதிரடி!!
ஆளுநர் பதவி விலக வேண்டும் : டி.ஆர்.பாலு அதிரடி!!

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிலுவையில் இருப்பதற்கு ஆளுநர்தான் பொறுப்பு என்பதால், அவர் பதவி விலக வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா குறித்த மனு அளிப்பதற்காக, அ.தி.மு.க., திமு.க., விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட 7 கட்சிகளின் பிரதிநிதிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டனர்.
3 முறை சந்திக்க திட்டமிட்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடியாதநிலையில், அந்த மனு உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் இனி நீட் தேர்வால் எந்த உயிரும் பறிபோகக் கூடாது என அரசியல் கட்சியினர் ஒற்றுமையாக மசோதா நிறைவேற்றினோம் என்றும் ஆனால் தமிழக அரசு நிறைவேற்றிய இந்த தீர்மானத்தை தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என கூறினார்.
மசோதா நிறைவேற்றி பல மாதங்களாகியும், உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் அனுப்பவில்லை. கடந்த 10 நாட்களாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் முயற்சி செய்து வருகிறோம்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடந்த 29-ம் தேதி சந்திக்க சென்றோம். தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்களை, அரசியல் காரணமாக அமித்ஷா சந்திக்க மறுப்பதாக நினைக்கிறேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்களை சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் மசோதா தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 3-வது முறையாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட்தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி உள்துறை அமைச்சகத்தில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிலுவையில் இருப்பதற்கு ஆளுநர்தான் பொறுப்பு, அதனால் அவர் பதவி விலக வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
newstm.in

