குரூப் 1 தேர்வு – டிஎன்பிஎஸ்சி பதில் அளிக்க உத்தரவு!!
குரூப் 1 தேர்வு – டிஎன்பிஎஸ்சி பதில் அளிக்க உத்தரவு!!

குரூப் 1 முதல்நிலை தேர்வின் மாதிரி விடைகளை ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்க கோரிய மேல்முறையீடு வழக்குகளில் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குரூப் 1 முதல்நிலை தேர்வு 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண் என்ற அடிப்படையில் நடைபெற்றது. 200 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் வெளியிடப்பட்டதில், 60 கேள்விகளுக்கான விடைகள் தவறு என கூறி, இதனை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், நிபுணர் குழு ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், ஒரு கேள்விகான பதில் மட்டும் தவறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து தேர்வர்களுக்கும் அதற்கான உரிய மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துகொண்ட உயர்நீதிமன்றம், தேர்வு எழுதியவர்களின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு வழக்குகள் உயர் நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், மாதிரி விடைகள் பற்றி விவாதிக்காமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும், எந்த அடிப்படையில் ஒரு கேள்விக்கான பதில் மட்டும் தவறு என நிபுணர் குழு முடிவுக்கு வந்தது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

மேலும், அனைத்து கேள்விகளுக்கான பதில்களும் ஆய்வு செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைத்து, அனைத்து கேள்விகளையும் பதில்களையும் மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் முகமது சபிக் அடக்கிய அமர்வு, வழக்கு குறித்து பதிலளிக்கும்படி அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
newstm.in

