தலைக்கேறிய போதை.. மதுவுக்கு பதில் பெட்ரோல்.. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி..!
தலைக்கேறிய போதை.. மதுவுக்கு பதில் பெட்ரோல்.. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி..!

விழுப்புரம் மாவட்டம் வி.அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற சேதுராமன். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (6ம் தேதி) பெட்ரோல் பங்க்கிற்கு சென்ற சேதுராமன், தனது இருசக்கர வாகனத்திற்கு பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார்.
அதேநேரம், டாஸ்மாக் கடைக்கு சென்று குடிப்பதற்கு மது பாட்டில்கள் வாங்கி வந்துள்ளார். ஒரு இடத்தில் அமர்ந்து இரு பாட்டில்களையும் அருகருகே வைத்துவிட்டு முதலில் மது குடித்துள்ளார். போதை அதிகமானதும் மேலும் மேலும் குடிப்பதற்கு மது பாட்டிலை எடுப்பதற்கு பதிலாக அருகிலிருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை எடுத்து மது என நினைத்து குடித்துள்ளார். இதனால் மயக்கம் அடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி சேதுராமன் உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தலைக்கேறிய போதையில் மதுவுக்கு பதில் பெட்ரோலை குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

