ஹெலிகாப்டர் விபத்து: குரூப் கேப்டன் வருண் சிங் உடல் இன்று தகனம்..!
ஹெலிகாப்டர் விபத்து: குரூப் கேப்டன் வருண் சிங் உடல் இன்று தகனம்..!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல், போபாலில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் என 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில், கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் வருண் சிங் உயிரிழந்தார்.
வருண் சிங்கின் உடல் நேற்று காலை பெங்களூருவில் உள்ள எலகங்கா விமானப்படை தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
விமானப்படை சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் நேற்று காலை 10 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 3 மணிக்கு அவரது உடல் போபாலை சென்று அடைந்தது. அங்கு அவரது குடும்பத்தினர் உட்பட பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

