வரும் 26ஆம் தேதி வரை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு
வரும் 26ஆம் தேதி வரை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் வரும் 26ஆம் தேதி வரை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டு தோறும் தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின் போது, பெருமளவில் காற்று மாசு கட்டுப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்த பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு பின் காற்று மாசு மெல்ல அதிகரிக்க தொடங்கியது.
கடந்த சில நாட்களாக காற்று மாசு மிகவும் அபாய கட்ட அளவில் இருப்பதால், டெல்லி மக்கள் திண்டாடி வருகின்றனர். டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், டெல்லி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரமொன்றில், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் முழு அளவில் ஊரடங்கை அமல்படுத்த தயார் என தெரிவித்தது. இதேபோன்று டெல்லியின் என்.சி.ஆர். பகுதிகளை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் ஊரடங்கை அமல்படுத்தினால் அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கும் என ஆலோசனையும் வழங்கியிருந்தது.
இதன்பின்னர் டெல்லியில் 15ஆம் தேதி முதல் ஒரு வார காலம் பள்ளிகள் மூடப்படும் என்றும் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்றும் 17ஆம் தேதி வரை கட்டுமான பணிகள் தடை செய்யப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது.

டெல்லியில் பள்ளிகள் மூடியிருப்பதற்கான கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், பள்ளிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. டெல்லியில் காற்று மாசுபாட்டால் அனைத்து பள்ளிகளையும் அடுத்த உத்தரவு வரும்வரை தொடர்ந்து மூடும்படி கல்வி இயக்குனரகம் தெரிவித்தது. எனினும், ஆன்லைன் வழி கல்வி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காற்று மாசுபாட்டால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகளை குறைக்கும் முயற்சியாக, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசியமற்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு வரும் லாரிகள் டெல்லி நகருக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. மேலும், ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும் விதிக்கப்பட்ட அனுமதியை நவம்பர் 26ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

எனினும் இந்த உத்தரவில், டெல்லியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உள்ளது. இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அலுவலகங்கள் தவிர பிற அரசு அலுவலகங்கள் நவம்பர் 26 வரை மூடப்பட்டிருக்கும். மேலும் நவம்பர் 26 வரை தனியார் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
newstm.in

