பூர்வகுடி குழந்தைகள் பள்ளியில் பல நூறு சவக்குழிகள்.. தோண்ட தோண்ட அதிர்ச்சி !!
பூர்வகுடி குழந்தைகள் பள்ளியில் பல நூறு சவக்குழிகள்.. தோண்ட தோண்ட அதிர்ச்சி !!

கனடாவில், மேலும் ஒரு புதை குழியில் இருந்து பழங்குடிப் பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறந்த பூர்வகுடி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்கள் படித்த பள்ளியில் சமீப வாரங்களாக தங்கள் குழந்தைகளின் காலணிகளை வைத்து கனடிய மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சாஸ்கட்சுவான் மாநிலத்தில் அமைந்துள்ள முன்னாள் பள்ளி வளாகத்தில் அந்த 751 குழந்தைகள் எலும்புகூடுகள் அடங்கிய கல்லறைத் தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர், பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாநிலத்தில் முன்னர் உறைவிடப் பள்ளி செயல்பட்ட இடத்தில் 215 குழந்தைகளின் எலும்புகள் அடங்கிய கல்லறைத் தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தடுத்து சிக்கும் கல்லறைத் தோட்டத்தால் அங்கு பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.

இதற்கென்று ஒரு வரலாற்றை கனடா பூர்வகுடி மக்கள் முன்வைக்கின்றனர். அதாவது, குடும்பத்தாரிடம் இருந்து பிரிக்கப்பட்ட பழங்குடிப் பிள்ளைகளைப்(பூர்வகுடி குழந்தைகள்) பள்ளிகளில் சேர்த்து வளர்க்கும் திட்டம் 1863 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் கனடாவில் நடப்பில் இருந்தது.
அந்தத் திட்டத்தின்கீழ் செயல்பட்ட சுமார் 150 பள்ளிகளில், சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட பள்ளிகளும் அடங்கும். அந்தப் பள்ளிகளில் சேர்க்கப்படும் பிள்ளைகள் தங்கள் தாய் மொழியில் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. தங்கள் பண்பாட்டை கடைபிடிக்க அனுமதியில்லை.

அவர்கள் , உடல், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் குழந்தைகளில் ஏராளமானோர் துன்புறுத்தப்பட்டனர் மற்றும் மோசமாக நடத்தப்பட்டனர்.
பழங்குடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள மனவேதனைக்குக் கனடா பொறுப்பேற்கவேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். நாடு முழுவதும் வாழும் பழங்குடிச் சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரத் தேவையான நிதியுதவியும் வளங்களும் தொடர்ந்து வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
மேலும், உயிரிழந்தவர்கள் மீண்டும் உயிர் பிழைக்க முடியாது என்றாலும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள் பற்றிய உண்மை வெளிப்படுத்தப்படும் என அவர் கூறினார்.
newstm.in

