ராஜினாமா செய்ய போறேன்... அமைச்சர் பேச்சால் பரபரப்பு!
ராஜினாமா செய்ய போறேன்... அமைச்சர் பேச்சால் பரபரப்பு!

புதுச்சேரி சட்டப்பேரவைக்கும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றம் எதிர்க்கட்சி என்.ஆர்.காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்படி, காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி அமைச்சரான பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் இரண்டாவது நாளாக தனியார் விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெகு விரைவாக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகள் கட்சி தலைவராக செயல்பட்டுள்ளேன். கட்சி தலைவராக செயல்பட்டபோது இரவு, பகலாக உழைத்துள்ளோம். இதனால்தான் பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றோம்.

பல்வேறு இடர்பாடுகளை தலைவர்கள் கொடுத்து வந்தனர். இந்த நிலை மாறாதா என்ற நிலையில் பாடுபட்டோம். ஒன்றன்பின் ஒன்றாக, சிறிது சிறிதாக சிறுமை படுத்தும் வகையில், பல்வேறு இடர்பாடுகளை பொறுத்து வருகிறோம். பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்ற நிலையில் தன்னுடைய நிலையை கட்சியின் தலைமைக்கு தெரிவித்து இருக்கிறேன்.
உச்ச கட்டமாக அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்து இருந்தேன். அப்போது, கட்சி தலைமை அழைத்து பேசி சமாதானப்படுத்தியது. அதனை ஏற்று தொடர்ந்து கடமையை செய்து வந்தபோதும்,தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டோம். எவ்வித முன்னேற்றம் இல்லை.
கட்சி நிர்வாகிகளுக்கு பதவி கொடுக்க 40 பேர் கொண்ட பட்டியலை தயாரித்து சோனியா காந்தி ஒப்புதல் அளித்தும் கூட அதை செயல்படுத்த முடியாது நிலை உள்ளது. இந்நிலையில், இரண்டு முடிவுகளை எடுத்துள்ளேன், ஒன்று அரசியலில் இருந்து விலகுவது, மற்றொன்ளு, மாற்று முடிவில் சிந்திப்பது. வெகு விரைவாக எந்த நேரத்திலும் எந்த முடிவு எடுக்கும் சூழலில் உள்ளேன். அமைச்சர் பதவிகளை தொடர்வதா வேண்டாமா என்ற எண்ணம் இருந்து கொண்டிருக்கிறது.

கலந்து பேசிய பின்னர் தீர்மானிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். வெகு விரைவாக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்று கூறினார். இதனால் புதுச்சேரி காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in

