'உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது' - ரயில் முன்பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை !!
'உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது' - ரயில் முன்பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை !!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது என சக மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஆடியோ அனுப்பிய மாநில கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த குமார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் (பிரசிடென்சி கல்லூரி) பி.ஏ. வரலாறு முதலாமாண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை புறநகர் ரயிலில் சக நண்பர்களுடன் வந்துள்ளார். திருநின்றவூர் ரயில் நிலையம் வந்த போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் குமாரை ரயிலில் இருந்து இறக்கி தனியாக அழைத்துச் சென்றுள்ளனர்.
அதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தன்னுடன் பயிலும் சக மாணவர்களுக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார் மாணவர் குமார். அதில் பச்சையப்பாஸ் மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது.. நண்பர்களே தப்பா நினைக்காதீங்க, அப்பா அம்மாவும் என்னை தப்பா நினைக்காதீங்க .. அவங்க போட்ட பிச்சையால் நான் வாழ முடியாது என பேசி உள்ளார்.

அந்த ஆடியாவை கேட்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து குமாரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். எனினும் அவர்கள் துரிதமாக செயல்பட்டு கண்டுபிடிப்பதற்குள் அவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். குமாரின் கல்லூரி அடையாள அட்டையை வைத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதனையடுத்து உடலைக் கைப்பற்றிய ரயில்வே காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் குமாருடன் பயின்று வரும் மாநிலக்கல்லூரியில் பயிலும் சக மாணவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மாநிலக் கல்லூரி மாணவனின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநில கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்குமிடையே கடந்த பல ஆண்டுகளாகவே கெத்து காட்டுவதில் தகராறு ஏற்படுவதுண்டு. கத்தி குத்து, அரிவாள் வெட்டு என ஆண்டு தோறும் ஏதாவது பெரிய பிரச்சினை இந்த புறநகர் ரயிலில் அறங்கேறி வருகிறது. இந்நிலையில் ஒரு மாணவன் தற்கொலை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
newstm.in

