தமிழகத்தில் இவை அனைத்தும் இனி 24 மணி நேரம் செயல்படும்..!!
தமிழகத்தில் இவை அனைத்தும் இனி 24 மணி நேரம் செயல்படும்..!!

கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசின், கடைகள் மற்றும் நிறுவனங்கள் பணி ஒழுங்குமுறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள் சட்ட மசோதா இறுதி செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், கடைகள், வங்கிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாரத்துக்கு 7 நாட்களிலும் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 2020-ம் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும் கடைகள் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட மீண்டும் அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 10 ஊழியர்கள் உள்ள கடைகள் 24 மணி நேரம் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு வாரத்தில் 1 நாளாவது விடுப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகள் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் நேர ஊதியம் உட்பட அனைத்து ஊதியமும் ஊழியர்களின் சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட வேண்டும், கூடுதல் நேரத்தையும் சேர்த்து நாளொன்றுக்கு 10.30 மணி நேரத்திற்கும் வாரத்திற்கு 57 மணி நேரத்துக்கும் மேல் ஊழியர்களை வேலை செய்ய அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
பெண் ஊழியர்களின் அனுமதி பெற்றே அவர்களுக்கு இரவு பணி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

