இந்த ஆட்சியில் ரவுடியிசம் அதிகரிப்பு.. போலீசார் - ரவுடிகள் கைகோர்ப்பு.. முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு..!
இந்த ஆட்சியில் ரவுடியிசம் அதிகரிப்பு.. போலீசார் - ரவுடிகள் கைகோர்ப்பு.. முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு..!

“மக்கள் நலன் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. சுக வாழ்க்கை வாழ்கின்றனர். ரங்கசாமி முதல்வரான பின்பு, ரவுடியிசம் அதிகரித்துள்ளது.
கடை, தொழிற்சாலைகளில் மாமூல் வசூலிக்கின்றனர். போலீசார், ரவுடிகளுடன் கைகோர்த்து செயல்படுகின்றனர்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “அரசியல் கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்கிறது.

இஸ்ரேல் நாட்டில் இருந்து ஏவுகணை மென்பொருள் வாங்குவது தொடர்பாக கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு மறைக்கிறது. விசாரணை முடியும் வரை பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. புதுச்சேரி மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதை அரசு கண்டுகொள்வதில்லை. புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசிடம் நிதி இல்லாத நிலையில், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர், எம்எல்ஏக்களுக்கு தலா 40 லட்சம் ரூபாய் மதிப்பில், மொத்தம் 4 கோடி ரூபாய் செலவில் 11 சொகுசு கார்கள் வாங்கி உள்ளனர்.
குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளை போடவில்லை. ஆனால், சொகுசு கார் வாங்குகின்றனர். மக்கள் நலன் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. சுக வாழ்க்கை வாழ்கின்றனர்.
ரங்கசாமி முதல்வரான பின்பு ரவுடியிசம் அதிகரித்துள்ளது. கடை, தொழிற்சாலைகளில் மாமூல் வசூலிக்கின்றனர். போலீசார், ரவுடிகளுடன் கைகோர்த்து செயல்படுகின்றனர்” என அவர் கூறியுள்ளார்.

