இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! தடுப்பூசி ஏற்றுமதி குறைய வாய்ப்பு!
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! தடுப்பூசி ஏற்றுமதி குறைய வாய்ப்பு!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய ,மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் சில வாரங்களாக பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதிலும் சில நாட்களாக இந்தியாவின் மொத்த மாதிப்பு ஒரே நாளில் 1லட்சத்திற்கும் அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது பரவி வரும் கொரோனாவின் 2வது அலை முதல் அலையைக் காட்டிலும், மிக அதிக அளவில் இருக்கிறது. இதனால் உலக அளவில் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து இந்தியா 3வது இடத்தில் இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தற்போதுள்ள வயது வரம்பை தளர்த்தி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்திற்கான, சர்வதேச கூட்டமைப்பின் தலைவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப் பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டில், தடுப்பூசிக்கான தேவை அதிகரிப்பதால் உலக நாடுகளுக்கு இந்தியாவின் தடுப்பூசி கிடைப்பதில் குறையும் எனவும், அதனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே இந்தியா கொரோனா தடுப்பூசியை சப்ளை செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

