இந்தியாவுக்கு ஒரு லட்சம் ட்ரோன் பைலட் தேவை.. ரூ.30,000 சம்பளம்.. மத்திய அரசு செம !!
இந்தியாவுக்கு ஒரு லட்சம் ட்ரோன் பைலட் தேவை.. ரூ.30,000 சம்பளம்.. மத்திய அரசு செம !!

பிளஸ் 2 பாஸ் செய்தவர்கள்கூட ட்ரோன் பைலட்டாக மாறி மாதம் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் வேலை பெறலாம் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
ட்ரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு சார்பில் மூன்று கட்டங்களாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் முதலாவதாக அதற்குரிய எளிய கொள்கைகளை வகுத்து அதை விரைவாக செயல்படுத்துவது. 2ஆவதாக ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்க அதற்குரிய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும், மூன்றாவதாக அதற்கான தேவையை அதிகரிக்கச் செய்வதாகும் என மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, தற்போது ட்ரோன்கள் உற்பத்திக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே ட்ரோன்கள் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக எளிய கொள்கைகளை சிவில் ஏவியேஷன் அமைச்சகம் வெளியிட்டது.

தற்போது பிளஸ் 2 பாஸ் செய்தவர்கள்கூட ட்ரோன் பைலட்டாக பயிற்சி மேற்கொண்டு அதை இயக்க முடியும். இதற்கு கல்லூரி படிப்பு தேவையில்லை. இரண்டு அல்லது மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு மாதம் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் வேலை நிச்சயம் கிடைக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளில் 1 லட்சம் ட்ரோன் பைலட்டுகளுக்கான தேவை உள்ளது, இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரத்தில் ட்ரோன்களை பறக்கவிடுவதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதாவது, ட்ரோன்கள் பறக்கவிடுவதற்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிகளை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு வெளியிட்டது. இதன்படி 250 கிராமுக்குக் குறைவான பார்சல்களை எடுத்துச் செல்லும் ட்ரோன்களுக்கு லைசென்ஸ் பெறத் தேவையில்லை. ட்ரோன்கள் மூலம் பார்சல்களை டெலிவரி செய்வது மட்டுமின்றி வயல்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கவும், புகைப்படம் எடுப்பதற்கும் அடர்ந்த வனப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிக்கும் ட்ரோன்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

