இந்தியாவின் தூய்மையான நகரம்.. முதலிடம் பிடித்தது இந்தூர்..!
இந்தியாவின் தூய்மையான நகரம்.. முதலிடம் பிடித்தது இந்தூர்..!

இந்தியாவில் தூய்மையான நகரமாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொடர்ந்து 5வது முறையாக விருது பெற்றுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுவச் சர்வேக்சன்’ திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதில், மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்தது. தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்து வருகிறது.
இரண்டாவது இடத்தை குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் பிடித்தது. இதற்கான விருதை, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
முதலிடம் பிடித்தது தொடர்பாக இந்தூர் நகர கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில், “தொடர்ச்சியாக 5வது ஆண்டாக தூய்மையான நகரம் விருது பெற்றதற்காக இந்தூர் நகர மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தூய்மை குறித்து மக்கள் இடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாகவே இது சாத்தியமானது” என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, 'வாட்டர் பிளஸ்' நகரம் என்ற அங்கீகாரத்தை இந்தூர் நகரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

