தமிழகத்தில் ஷவர்மாவிற்கு தடையா ? சுகாதாரத்துறை செயலர் சொல்வதென்ன ?
தமிழகத்தில் ஷவர்மாவிற்கு தடையா ? சுகாதாரத்துறை செயலர் சொல்வதென்ன ?

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், கெட்டு போன இறைச்சிகளை அப்புறப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஷவர்மாவுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவத்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் ஷவர்மாவிற்கு தடை இல்லை. கேரளாவில் நிகழ்ந்த சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது, கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.” என்றார்.
முன்னதாக, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் ஷவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

