கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தீ விபத்துக்கு இதுதான் காரணமா..?
கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தீ விபத்துக்கு இதுதான் காரணமா..?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கடந்த 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், கோயில் கருவறை மண்டபம் முற்றிலுமாக எரிந்து சேதமானது.
இதையடுத்து, “நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலை தேவ பிரசன்னம் பார்த்து பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும்” என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், கேரள பாரம்பரிய படி தேவ பிரசனம் பார்க்க கேரள மாநிலம் வையநாடு பகுதியைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஸ்ரீநாத்ம், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் வருகை தந்து பிரசன்னம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “கோயில் ஊழியர்களின் அஜாக்கிரதையே தீ விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறுதி விசாரணை அறிக்கை வந்த உடன் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இக்கோயிலில் மேற்கூரை அமைக்கும் பணிக்காக 50 லட்சம் ரூபாயும், தீயணைப்பு கருவிகள் மற்றும் பிற வேலைகளுக்காக 35 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரசன்னத்தில் கூறும் கருத்துக்களை ஒட்டி மேற்கூரை அமைக்கும் பணி நடைபெறும். கோயில் திருப்பணிக்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் முதல்வரின் உத்தரவை பெற்று கூடுதல் நிதி ஒதுக்கப்படும்” எனக் கூறினார்.