கரிசல் இலக்கியத்தின் தந்தை “எழுத்தாளர் கி.ராஜநாராயணன்” மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் !!
கரிசல் இலக்கியத்தின் தந்தை “எழுத்தாளர் கி.ராஜநாராயணன்” மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் !!

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் பிரபல எழுத்தாளர் கி.ரா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. இவர் 1923ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி பிறந்தார். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமம்.
இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பதால், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.கி.ரா. சாக்திய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றுள்ளார்.
இவரது கோபல்லபுரத்து மக்கள், கோபல்லபுரத்து கிராமம் ஆகிய படைப்புகள் உலகத்தரம் வாய்ந்தவை. இவரது கோபல்லபுரத்து மக்கள் படைப்புக்காக 1990ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் வசித்து வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக தனது 99 வயதில் கி.ராஜநாராயணன் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கி.ரா. மறைவுக்கு மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் "கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி.ராஜநாராயணன் நம்மை நீங்கினார். அவருக்குப் புகழஞ்சலி." என பதிவிட்டுள்ளார்
கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி.ராஜநாராயணன் நம்மை நீங்கினார். அவருக்குப் புகழஞ்சலி.
— Kamal Haasan (@ikamalhaasan) May 18, 2021
மேலும் எழுத்தாளர் கி.ரா.வின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

