கடத்தல் வழக்கு.. சிறையில் இருந்து வெளியே வருகிறார் பாஜகவின் சூர்யா சிவா !!
கடத்தல் வழக்கு.. சிறையில் இருந்து வெளியே வருகிறார் பாஜகவின் சூர்யா சிவா !!

திமுக மாநிலங்களவை உறுப்பினரும், கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவருக்கு, தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக, சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன்வேலி குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சூர்யா சிவா அண்மையில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே அவருக்கு பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், இவர் கடந்த 11ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் பேருந்து சூர்யா சிவாவின் கார் மீது மோதியது.

இதுதொடர்பாக திருநாவலூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சேதமடைந்த காரை சீரமைத்துத் தருவதற்கான தொகையை பங்கிட்டுக் கொள்வதாக தனியார் பேருந்து நிறுவனத்தினர் சூர்யா சிவாவிடம் கூறியதாக தெரிகிறது. அதன்பேரில் சூர்யா சிவா தனது காரை பழுதுநீக்க கொடுத்துள்ளார்.
அதன்பின், காரை சீரமைப்பதற்கான செலவுத் தொகையை கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சூர்யா சிவா தனது ஆதரவாளர்களுடன் சென்று, கடந்த 19ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்நிறுவனத்தின் மற்றொரு பேருந்தை எடுத்துச் சென்று சோமரசம்பேட்டை பகுதியில் தனது வீட்டருகே நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தினர், தங்களது பேருந்தை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து சூர்யா சிவாவை கைது செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா, தனக்கு இந்த வழக்கில் ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் உள் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சட்டபடி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சூர்யா சிவாவிற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், சூர்யா தினந்தோறும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனையுடன், ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
newstm.in

