சுரங்கத்தில் நிலச்சரிவு.. ஒருவர் பலி: 80 பேர் மாயம்.. மீட்புப்பணி தீவிரம்..!
சுரங்கத்தில் நிலச்சரிவு.. ஒருவர் பலி: 80 பேர் மாயம்.. மீட்புப்பணி தீவிரம்..!

வடக்கு மியான்மரில் உள்ள பச்சை மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்; 80க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளதாக மீட்புக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி சுமார் 4 மணியளவில் கச்சின் மாநிலத்தின் பகந்த் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மியான்மர் நாட்டில் உலகின் மிகப்பெரிய சுரங்கங்கள் உள்ள நிலையில், அங்கு பல ஆண்டுகளாக ஏராளமான விபத்துக்களும் நிகழ்ந்து வருகின்றன.
இந்த பச்சை மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கம் பகந்த் பகுதியில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் விதிமுறைகளை மீறுகின்றனர். அங்கு வேலையின்மை மற்றும் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வறுமை காரணமாக அவர்கள் இது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக பச்சை மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழிலாளர்கள் என்று கூறப்படும் நிலையில், தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 200 மீட்புக்குழுவினர் உடல்களை மீட்க தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலர் படகுகளை பயன்படுத்தி அருகில் உள்ள ஏரியில் இறந்தவர்களை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

