பழம்பெரும் நடிகையின் மகன் மோசடி வழக்கில் கைது..!
பழம்பெரும் நடிகையின் மகன் மோசடி வழக்கில் கைது..!

அரிய வகை இரிடியம் என்ற பொருளை விற்று தருவதாக கூறி ரூ. 26 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறி நடிகை ஜெயசித்ராவின் மகனும் இசையமைப்பாளருமான அம்ரீஷ் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் (33). இவர் நானே என்னுள் இல்லை என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது. அதை தொடர்ந்து அவர் இசையமைப்பாளராக மாறினார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, அரவிந்த் சாமி நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2 ‘ உள்ளிட்ட படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் (68) என்பவரிடம் கடந்த 2013-ம் ஆண்டு அம்ரீஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் அரிய வகை இரிடியம் தங்களிடம் இருக்கிறது. அதை மலேஷியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ரூ. 2.50 லட்சம் கோடிக்கு வாங்க தயாராகவுள்ளது. அதற்காக ரூ. 26.20 கோடி கடனாக தந்தால், இரிடியத்தை அந்நிறுவனத்திற்கு விற்க வசதியாக இருக்கும். லாபமாக கிடைக்கும் பணத்தில் வாங்கிய கடன் போக மீதி தொகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
அவர்களுடைய பேச்சை நம்பிய நெடுமாறன், அம்ரீஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு ரூ. 26.20 கோடியை கடனாக கொடுத்துள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் மலேஷிய நிறுவனத்திடம் இருந்து எந்த பணமும் வரவில்லை. அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டு இருப்பது நெடுமாறனுக்கு தெரிகிறது. உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நெடுமாறம் புகாரளித்துள்ளார்.
இந்த விபரம் தெரியவந்ததை அடுத்து அம்ரீஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகளும் தலைமறைவானதாக கூறப்படுகிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் அவருடைய தாய் ஜெயசித்ரா மற்றும் மனைவி மட்டும் இருந்துள்ளனர். தொடர்ந்து அம்ரீஷ் மற்றும் கூட்டாளிகளை போலீசார் தேடி வந்துள்ளனர்.
கடந்த 15-ம் தேதி சென்னை தி.நகரிலுள்ள கிருஷ்ணாவில் இருக்கும் ஒரு வீட்டில் சினிமா இசை அமைக்கும் பணிக்காக அம்ரீஷ் அங்கு வந்துள்ளார். உடனடியாக தகவலறிந்த குற்றப்பிரிவு போலீசார், அங்கு சென்று அமரீஷை கைது செய்தனர். தொடர்ந்து அவரை விசாரணைக்காக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நடைபெற்ற விசாரணையில் இரியடித்தை விற்று தருவதாக கூறி நெடுமாறனிடம் ரூ. 26.20 கோடி பணத்தை வாங்கியதாக அம்ரீஷ் ஒப்புக்கொண்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் இருந்த கூட்டாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

