'பாஜக அலுவலகத்தை தகர்ப்போம்..எச்.ராஜாவை கொல்வோம்'.. மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!!
'பாஜக அலுவலகத்தை தகர்ப்போம்..எச்.ராஜாவை கொல்வோம்'.. மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!!

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதில், ’முஸ்லிம்களுக்கு எதிராக சிஏஏ, என்ஆர்சி கொண்டுவந்த பாஜக அரசையும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எச்.ராஜா ஆகியோரை வெடிகுண்டு வைத்து கொல்வோம். கமலாலயத்தையும் தகர்ப்போம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை அனுப்பியவர், தான் மின் வாரியத்தில் பணிபுரிவதாக கூறி தனது பெயரையும், சென்னை செங்குன்றத்தில் வசிப்பதாகவும் கூறி வீட்டு முகவரியையும் எழுதியிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாஜகவினர் போலீசாரிடம் புகார் அளிக்க முடிவு செய்தனர். அதன்படி, பாஜக அலுவலக மாநில செயலாளர் கரிகாலன், தி.நகர் காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பாஜக அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கடிதம் கடந்த மாதம் 3ஆம் தேதி மிரட்டல் கடிதம் வந்ததாகவும், பாஜகவினர் தற்போது புகார் அளித்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
newstm.in


