தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் உரிமம் ரத்து!!
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் உரிமம் ரத்து!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனம் அல்லது அங்காடியின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சிஎச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 25 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை,2496 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.3,78,600/- அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாக்கோல் தட்டுகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தலாம்.

சென்னை மாநகரை அழகுப்படுத்தவும், பசுமைப் பரப்பளவை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடுதல், தீவிர தூய்மைப் பணியின் கீழ் நீண்ட நாள் கழிவுகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு,தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வணிக நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்ட பிறகும், நான்காவது முறை தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் (அ) அங்காடியின் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும்.
எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

