குளிர்பானத்தில் மிதந்த பல்லி.. கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
குளிர்பானத்தில் மிதந்த பல்லி.. கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் செயல்பட்டு வரும் மெக்டொனால்ட் கடையில் விற்கப்பட்ட குளிர்பானத்தில் இறந்த பல்லி மிதந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்டொனால்ட்ஸ் குளிர்பானக் கடையில் இரண்டு பேர் கோக் குடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பல்லி அந்த பானத்தில் இருப்பதை அவர்கள் கண்டனர்.
உடனே, வாடிக்கையாளர்களில் ஒருவரான பார்கவா ஜோஷி, அதை படம் பிடித்து தனது ட்விட்டரில் பதிவிட்டார். இந்த வீடியோ உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலானது.

தொடர்ந்து அவர் இது குறித்து மெக்டொனால்ட் மேலாளரிடம் புகார் அளித்தார். ஆனால் அவர், இது குறித்து அதிக கவனம் செலுத்தவில்லை என்றும் வேண்டுமானால், குளிர்பானம் வாங்க செலுத்திய பணம் திரும்ப தரப்படும் என தெரிவித்ததாக ஜோஷி குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி, கடைக்கு சீல் வைத்தனர். மேலும், குளிர்பானத்தின் மாதிரியை எடுத்து பொது சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, மெக்டொனால்ட் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை எங்கள் நிறுவனம் மதிக்கிறது. இது போன்ற செயலுக்கு மன்னிப்பு கோருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

